இக்கட்டான
நிலையிலும் பாதுகாப்பவர்

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் இக்கட்டான
சூழ்நிலை வரத்தான் செய்யும். நம்மால் அதிலிருந்து தப்ப
முடியாத நிலையிலும்கூட, கர்த்தர் மீது நம்பிக்கை வைக்க
வேண்டும். அவர் நம்மை எந்த சூழ்நிலையில் இருந்தும்,
மிக எளிதாகக் காத்துவிடுவார். ரஷ்யாவில் கணவனை இழந்த
பெண் ஒருத்தி, இரண்டு மகள்கள், ஊனமுற்ற ஒரு மகனுடன்
வசித்து வந்தாள். அந்தச்சிறுவனால் வெளியில் எங்கும்
செல்ல முடியாது. தேவாலயத்திற்கு மட்டும் அவனது
சகோதரிகள் தூக்கிச் செல்வர். ஒருசமயம், ரஷ்யா மீது
நெப்போலியன் படையெடுத்தார். அது பனிக்காலம் என்பதால்,
வீரர்களால் குளிரைத் தாங்க முடியவில்லை. இதனால்,
நெப்போலியன் போர் தொடுக்காமல், தன் படையினருடன் நாடு
திரும்பினான்.
போர் புரியாததால் கோபம் கொண்ட வீரர்கள், வழியில்
இருந்த பல கிராமங்களை நாசப்படுத்தினர். நெப்போலியனின்
படைக்கு பயந்த மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு
கிளம்பினர். கணவனை இழந்த பெண்ணுக்கு தன் மகனை
தூக்கிச்செல்ல முடியாத நிலை. அவளால் மகனை விட்டுச்
செல்லவும் மனம் வரவில்லை. எனவே, மகள்களை மட்டும்
தப்பிச் செல்லும் படி சொன்னாள். அவர்களும் தாம்
சகோதரனுடனே இருப்பதாகச் சொல்லிவிட்டனர்.
நிலைமையுணர்ந்த சிறுவன், தாயிடம் தன்னை அங்கேயே
விட்டுச்சென்று, அவர்களாவது தப்பித்துக் கொள்ளும்படி
சொன்னான். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. நடப்பது
நடக்கட்டும். கர்த்தர் நம்மைக் காப்பார் என நம்பிய
அவர்கள், ""ஆண்டவரே! இக்கட்டில் இருக்கும் எங்களைக்
காப்பாற்றும்'' என்று நம்பிக்கயுடன் ஜெபித்தனர்.
அன்றிரவில் நெப்போலியன் படையினர் அந்தக்கிராமத்திற்குள்
புகுந்தனர். அங்கிருந்த பெரும்பாலான வீடுகளை நாசம்
செய்துவிட்டுச் சென்றனர். ஆனால், கணவனை இழந்த பெண்ணின்
வீட்டிற்கு மட்டும் ஒன்றும் ஆகவில்லை. மறுநாள் காலையில்
வீட்டிற்கு வெளியே வந்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
வீட்டைச் சுற்றிலும் பனி உறைந்து, மதில் போல இருந்தது.
இதனால், படையினர் அங்கு வீடு இருந்ததைக் கவனிக்காமல்
சென்றுவிட்டனர். மகிழ்ந்த அப்பெண், தன் குடும்பத்தைக்
காப்பாற்றிய கர்த்தருக்கு நன்றி சொல்லி ஜெபித்தாள்.
""என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து இரட்சண்யப்
பாடல்கள் என்னை சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர்''
என்கிறது பைபிள். நம்மை என்றும் இக்கட்டான
சூழ்நிலையிலிருந்து காக்கும் கர்த்தர் மீது நம்பிக்கை
கொண்டு ஜெபியுங்கள். அவர் உங்களை கைவிடமாட்டார்.
|